வெள்ளி, 25 ஜூன், 2010

குழந்தைகளின் கனவு


-ந.மயூரரூபன்

ஊதி ஊதி மூட்டுந்தீ
குழந்தைகளினுலரும் கனவுகளின்
நுளைவழி தேடிச்சதிராடி
மரவிருள் பிணைந்து தொங்குகிறது.

குழந்தைகளின் கனவுகள் பார்த்திருக்க
ஓடிக்கொண்டிருக்கிறது
அதனீரம் பறித்த மாய ஆறு.
தகிக்குமெங் கனவுகள் தொடமுடியா
மாய ஆறு அது.

ஈரந்தொலைத்த சேதி
ஆற்றுப்படுகையில் விழுந்து
முட்கம்பியோரமாய் திக்கற்றலைகிறது.
மரவிருள் தின்னச் சுருண்டிருக்கிறது.

கனவுகள் உலருமோசை
வண்ணங்கள் புதைந்துபோன
நிலமெங்கும் கேட்கிறது.
மாய ஆற்றின் சலசலப்பும்
உதிர்ந்தழிகிறது.

ஓசைகளுடையும் சடசடப்பில்
மரவிருள் மிடைத்து வருந்தீ
வகுந்தேறுகிறதெங்கும்.
கனல் கக்கும் பொழுதொன்றில்
குழந்தையின் கனவுகள்
தீயில் நனைகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக