திங்கள், 31 ஜனவரி, 2011

அவரவர் கணங்கள்


-ந.மயூரரூபன்



உனக்குள் நீ நிறைந்திருப்பதாய்
உன்னைச்சுற்றும் திரைகளில்
சலனப்புள்ளிகள் நிறைகின்றன.
உன் காலடிகளின்
வெற்று வரைவுகளைத் தின்னும்
கணங்களொவ்வொன்றும்
உன் கால்களிலேயே தொங்கிக் கொள்கின்றன.

நினைவு மயக்கும்
எண்ணங்களை அந்தக்கணங்கள்
உன்னைச்சுற்றித் துப்புகின்றபோது
குருட்டுப்புலன் விதைக்கும் கனவுகளே
எங்கும் முளைக்கின்றன.

உனக்குள் நிறைந்திருப்பதாய்
நீ நினைக்குமுன்னை
அவனுக்குள்ளும் எனக்குள்ளும்
இறக்கிக் கொள்வதற்காய்
உன் குருட்டுப்புலன்களை
கணந்தோறும் ஏவுகிறாய்.

அக்கணந்தோறும்
உனக்குள் நீ நிறையும்
வெற்று வரைவுகளில்
மூழ்குகிறாய்.

உன்னெதிரே உன்சுவடுகள்
எரிந்துபோகும் கணங்கள்
மறைந்துபோகின்றன.
அவனும் நானும்
நீயற்ற
அவரவர் கணங்களை வாசித்தபடி
சலனமற்றிருக்கிறோம்.

310120112240

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக