திங்கள், 30 மே, 2011

அர்த்தம் தொலையும் வாழ்வு

-ந.மயூரரூபன்

நிறங்களற்ற காற்றினுடற் குவியலில்
முகம் புதைய
தன்னசைவு மறைக்கும் பறவையொன்று
இழையொன்றைப் பின்னுகிறது.

காற்று இறந்துவிழும் இடத்தில்
அந்தப்பறவை படுத்திருக்கிறது.

காற்றின் வந்துவிழும்
ஏதுமற்ற நெடுத்த வெளிகளையும்
தூக்கந் தொலையும் குகைக்குள்
இழுத்துக் கொள்கிறது.

எதுவுமேயற்றதென நினைக்குமுன் கணங்கள்
காலமுரிந்துபோன
பாம்புச் செட்டையாகிறது.
பாம்பாய்த் துரத்தும் காலத்தை
எதுவுமேயற்ற நிர்வாண வெளிகளால்
காயப்படுத்துகிறாய்.
அந்தக்குகையின் கற்கள்
உனது நிர்வாணத்தையும் மூடிக்கொள்கிறது.

இருள் கொட்டும் விழிகள்
காற்றிறந்து விழும் குகையின்
வாசலில் மறையாதிருக்கும்.
அர்த்தமற்ற கணங்களில்
தன்னசைவு மறைக்கும்
இழைகளைப் பின்னும் பறவை
உன்னையே பார்த்திருக்கிறது.

விழி விறைத்துத் தொங்குமுன் உடலில்
ஏதுமற்றதென்னும் பாம்புச் செட்டை பிணைந்திருக்கிறது.

300520111605

செவ்வாய், 17 மே, 2011

ஏதுமற்றுக் கரைதல்

-ந.மயூரரூபன்

நான் நடக்கின்ற பாதை
எரியமுடியாத இருளினடிக்கட்டைகளால்
கிழிபட்டிருந்தது.
ஒவ்வொரு காயக்கிடங்கிலும்
செந்நிறமுறிஞ்சிய நினைவுகளை
விழுங்கிய எறும்புகள்
பரபரத்தோடி விழுகின்றன.

பாதையின் முடிவற்ற வரிகளை
ஒவ்வொருவரிடமும் காவியபடி
ஊர்ந்துவருகின்றன சிவந்த எறும்புகள்.

உலரமுடியா அழுகையினீரம்
இருட்கட்டைகளிலிருந்து சிந்துகிறது.
ஓலச்சுவர்களின் வெறுமையில்
நாக்கறுந்த பல்லியொன்றினசைவு
எதுவுமற்றுக் கரைந்துபோகிறது.

நினைவுப்பாலையாகிவிட்ட
இந்த நிலத்திலிருந்து
காயக்கிடங்கில் எறும்புகள் மொய்த்த
என்னைப்பார்க்கிறேன்.
இருட்கட்டைகளினீரம் எங்கும்டர
ஏதுமற்றுக் கரைந்துபோகிறேன்.

170520112340

ஞாயிறு, 1 மே, 2011

குதிரைகள் இறங்கும் குளம்


-ந.மயூரரூபன்

வார்தைகள் நிலையழிந்து
முட்டித்திரியும் என் கனவுக்குளத்தின்
கரைகளில் காட்டுக்குதிரையொன்று
திமிர்த்து நடைபயில்கிறது.
கருப்பு வௌ்ளைக் காட்சித் திரையாய்
நிரம்ப முடியாக்குளம்
கருநிழல் சாய்ந்த அக்குதிரையின்
கனைப்பொலி நிறைத்து
இன்னொன்றிற்காய் காத்திருக்கின்றது.

உன்நினைவுகள் முளைத்தவெளியை
மேய்ந்த தொன்மைக்குதிரையது.
தொன்னீராய் ஊழ் தொழியும்
என்குளத்தில் தீராத்தாகம் முடிக்க
தன்கனைப்புகள் வரையும் பாதையில்
ஏறி வருகிறது.

இச்சைகளுடைபடு கணங்கள்
வண்ணச்சேறாய் காட்சித்திரையில்
வழிந்துறைகிறது.
நிரம்பமுடியாக்குளத்தின் கரைவெளியெங்கும்
வண்ணங்குளைந்த கனைப்பொலிகளின் பாதை
திசைகளுடைபடத் திறந்துகொள்கின்றன.

நிற இலைகளடர்ந்த செடியொன்று
கரையில் முளைத்தபோது
காட்டுக்குதிரைகள் கணக்கற்று
என்குளத்தில் இறங்கிக்கொண்டிருந்தன.

010520112055