ஞாயிறு, 1 மே, 2011

குதிரைகள் இறங்கும் குளம்


-ந.மயூரரூபன்

வார்தைகள் நிலையழிந்து
முட்டித்திரியும் என் கனவுக்குளத்தின்
கரைகளில் காட்டுக்குதிரையொன்று
திமிர்த்து நடைபயில்கிறது.
கருப்பு வௌ்ளைக் காட்சித் திரையாய்
நிரம்ப முடியாக்குளம்
கருநிழல் சாய்ந்த அக்குதிரையின்
கனைப்பொலி நிறைத்து
இன்னொன்றிற்காய் காத்திருக்கின்றது.

உன்நினைவுகள் முளைத்தவெளியை
மேய்ந்த தொன்மைக்குதிரையது.
தொன்னீராய் ஊழ் தொழியும்
என்குளத்தில் தீராத்தாகம் முடிக்க
தன்கனைப்புகள் வரையும் பாதையில்
ஏறி வருகிறது.

இச்சைகளுடைபடு கணங்கள்
வண்ணச்சேறாய் காட்சித்திரையில்
வழிந்துறைகிறது.
நிரம்பமுடியாக்குளத்தின் கரைவெளியெங்கும்
வண்ணங்குளைந்த கனைப்பொலிகளின் பாதை
திசைகளுடைபடத் திறந்துகொள்கின்றன.

நிற இலைகளடர்ந்த செடியொன்று
கரையில் முளைத்தபோது
காட்டுக்குதிரைகள் கணக்கற்று
என்குளத்தில் இறங்கிக்கொண்டிருந்தன.

010520112055

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக