திங்கள், 30 மே, 2011

அர்த்தம் தொலையும் வாழ்வு

-ந.மயூரரூபன்

நிறங்களற்ற காற்றினுடற் குவியலில்
முகம் புதைய
தன்னசைவு மறைக்கும் பறவையொன்று
இழையொன்றைப் பின்னுகிறது.

காற்று இறந்துவிழும் இடத்தில்
அந்தப்பறவை படுத்திருக்கிறது.

காற்றின் வந்துவிழும்
ஏதுமற்ற நெடுத்த வெளிகளையும்
தூக்கந் தொலையும் குகைக்குள்
இழுத்துக் கொள்கிறது.

எதுவுமேயற்றதென நினைக்குமுன் கணங்கள்
காலமுரிந்துபோன
பாம்புச் செட்டையாகிறது.
பாம்பாய்த் துரத்தும் காலத்தை
எதுவுமேயற்ற நிர்வாண வெளிகளால்
காயப்படுத்துகிறாய்.
அந்தக்குகையின் கற்கள்
உனது நிர்வாணத்தையும் மூடிக்கொள்கிறது.

இருள் கொட்டும் விழிகள்
காற்றிறந்து விழும் குகையின்
வாசலில் மறையாதிருக்கும்.
அர்த்தமற்ற கணங்களில்
தன்னசைவு மறைக்கும்
இழைகளைப் பின்னும் பறவை
உன்னையே பார்த்திருக்கிறது.

விழி விறைத்துத் தொங்குமுன் உடலில்
ஏதுமற்றதென்னும் பாம்புச் செட்டை பிணைந்திருக்கிறது.

300520111605

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக