புதன், 3 நவம்பர், 2010

பூராயம்


-ந.மயூரரூபன்



விழி விரிய விரியப் பார்க்க
இதென்ன விளங்காப் பூராயமோ
படையெடுக்கும் வாகனங்களில்
பரவசமாய் வீரங்கிளர
மூத்திரக் குடிலிருந்த ஒதுக்கையும்
புகுந்து முகர்ந்து பாக்குமிந்த
விலைபோன பூராயம்.

நிலம் வரண்டு
மனங்கிழிந்து
குடல்காயக் கிடக்கும்
மூச்சுக்களொன்றும்
உங்கள் பூராயவெளியி்ல்
மோதவில்லை.

மதர்த்த உங்களின் புதினங்களையே
வாகனங்களில் காவித் திரிகிறீர்கள்.

உலைந்த நிலத்திலும்
கிழிந்த கோவணத்திலும்
இந்தப் புதினங்களையே
விட்டுச் செல்கிறீர்கள்.

எங்கள் புதினங்கள்
புழுதி குளித்தபடி
எங்களுடனேயே கிடக்கிறது.


04112010.

திங்கள், 1 நவம்பர், 2010

சிலந்தி


-ந.மயூரரூபன்



குருட்டுச் சுணைகளின் மடல்கள்
நான் நடக்கும் இழைவழியெங்கும்
முறைகெட்டுக் கொட்டுகிறது.
வழிபுனையுமந்த இழை
தன் இரகசிய நினைவுள்
மரணம் வாசம் மிஞ்சிய
கருப்புக் குகையுள்
சிலந்தி தெரியா வலையை
பிணைந்துகொள்கிறது.

முட்களில் குந்தும் மனதை
மறைத்து மூடும் மடல்கள்
செத்து வீழுமென்னை
ஒவ்வொரு கணமும்
இழைவழின் இரகசியத்துள்
புதைத்துப்பின் சிரிக்கிறது...
என்னுடன் குனிந்தழுகிறது.

வடதிசைக் காவலனின்
சவப்பெட்டி நிறையும் ஆரவாரத்துடன்
நீங்கள் வருகிறீர்கள்...
எனக்கான இழைவழியில் பார்த்திருக்கிறேன்
குருட்டுச்சுணை மடல்களுடன்.

இரகசிய நினைவுள் நீங்கள் போவதையும்
பார்க்க மறுக்கிறேன்...
என் இழைவழி காட்டும் வலைக்கான சிலந்தியை
உயிர்ப்புடன் காவிச் செல்கிறீர்கள் என்பதும்
எனக்குத் தெரிய நியாயமில்லைத்தான்.


02112010