செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

சாத்தானின் ஒரே பழம்

-ந.மயூரரூபன்

கை படாத காற்று அது.
பார்வை விழாத நிலத்தில்
படரும் ஒழுங்கே
அதனுச்சியில் அறையப்பட்டது.

மாறுங் காலத்தின்
இருக்கையின் துகள்கள்
ஒளிந்து கொள்வதற்காய்
அந்த ஒற்றைப் பழத்துள் புதைகின்றன.

புதைவழியை
வரைந்து கொடுக்கும் பெருமரம்
காற்றின் குலக்குறியமது.

நுனி தெரியாக்
காலத் தொழுகையால்
மயங்கும் காற்றை
கனவுகளால் மிதிக்கும்
ஒற்றைப்பழ மரமது.

நுளை பாவங்களால்
அறுந்து விழும் பழம்
காற்றின் மடியில் மறைகிறது.

அடர் கரங்களுக்குள்
ஆர்ப்பரித்தோடுகிறது காற்று.
எங்கும் கொட்டுகின்றன
அதே புதைதுகள்கள்.

090820111505