வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

நிழற்குருதி

-ந.மயூரரூபன்


பொழுதுகள் விழுங்கிடங்கு
வளர்ந்துள்ளோடுகிறது
கட்டைகளடித்த வெண்படங்குள்
பொழுதுகளைத்திணித்து
ஆழ விழுகிறது என் நிழல்.
படங்கின் மூடாப்படலையை
முட்டுகிறது இருள்
எதிர்வரும் நாட்களைச் சப்பியபடி...



மூச்சோய்ந்த நாட்களைச் 

சுமந்துவரும் காண்டாவனம் 

கந்துள் சுமந்து
மோதுகிறதெங்கும்.
எங்கள் கனவுகளின் மிடுக்குகளை
தன் சுழிக்குள் மறித்திழுக்கிறது .
அசைவழிந்த எம் கனவுகள்
புகைபடிந்துபோகின்றன.



சருகுகளொடியும் ஒலி

வழியாப் பாழியினுள்
ஈரம் பதுங்கியிருக்கிறது.
காதுகளறுந்துபோன காற்று
எங்களெரி வனத்தின்
முகந்தீய்த்துப் பார்த்திருக்கிறது.



கண்கள் ஒளித்துக்கொண்ட
சாம்பர்ப் பொழுதுகளை
அழையும் விரல்களோடு
விழுந்துகிடக்கிறது என்னிழல்.
கீறிச்செல்லும் வெயிலிலும்
காயாமல் கசிகிறது
என்னிழலின் குருதி.


03072010

சனி, 7 ஆகஸ்ட், 2010

பொய்



-ந.மயூரரூபன்

மெய்யற்ற தளிர்கள்
பசுமையைப் பறித்தெடுக்கின்றன.
உன்னைச்சூழப் படரும் வெம்மை
உண்மையற்றதென உன்னினைப்பு.

வருங் கணங்களிலெலாம்
மெய்யழிந்த சிறுதுளிர்களைக்
கொழுவி விடுகிறாய்.

தின்னப்பட்ட
உன்னிழல்களின் சுவடுகள்
மறைந்துவிட்ட பொழுதுகளில்
மெய்மறைந்த
நிழல்கள் கறுக்கின்றன.

ஆற அமருவோர் யாருமின்றி
நீயமிழ்ந்திருக்கும்
பொய்வெளியே எங்கும்
சத்தமின்றிப் படருகின்றது.

சுற்றித் துளிர்க்கும்
உன் மெய்யுருவிய பொய்களால்
ஒளி நுளையும் பொட்டுக்கள்
கரையும் பொழுதுகளில்
சத்தமின்றி உன்னைத் தின்கிறது.