திங்கள், 1 நவம்பர், 2010

சிலந்தி


-ந.மயூரரூபன்



குருட்டுச் சுணைகளின் மடல்கள்
நான் நடக்கும் இழைவழியெங்கும்
முறைகெட்டுக் கொட்டுகிறது.
வழிபுனையுமந்த இழை
தன் இரகசிய நினைவுள்
மரணம் வாசம் மிஞ்சிய
கருப்புக் குகையுள்
சிலந்தி தெரியா வலையை
பிணைந்துகொள்கிறது.

முட்களில் குந்தும் மனதை
மறைத்து மூடும் மடல்கள்
செத்து வீழுமென்னை
ஒவ்வொரு கணமும்
இழைவழின் இரகசியத்துள்
புதைத்துப்பின் சிரிக்கிறது...
என்னுடன் குனிந்தழுகிறது.

வடதிசைக் காவலனின்
சவப்பெட்டி நிறையும் ஆரவாரத்துடன்
நீங்கள் வருகிறீர்கள்...
எனக்கான இழைவழியில் பார்த்திருக்கிறேன்
குருட்டுச்சுணை மடல்களுடன்.

இரகசிய நினைவுள் நீங்கள் போவதையும்
பார்க்க மறுக்கிறேன்...
என் இழைவழி காட்டும் வலைக்கான சிலந்தியை
உயிர்ப்புடன் காவிச் செல்கிறீர்கள் என்பதும்
எனக்குத் தெரிய நியாயமில்லைத்தான்.


02112010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக