செவ்வாய், 12 அக்டோபர், 2010

புலன்


-ந.மயூரரூபன்



வயிற்றால் ஊர மனமின்றி
நெகிழ்ந்து படுத்திருக்கிறது பாம்பு.
வீங்கிய வயிற்றுள்
செந்நீர் வற்றுமென் அங்கங்கழற்றிய
 பொறிகளைந்தும்
பதனமழியக் கிடக்கிறது.

தனிமை நெடுத்துப்
புலம்பியழும் புலன்களினோடை
மூச்சறியாக் காற்றுவெளியிடை இறங்குகிறது.
பறவைகளிறங்காப் புதர்கள்
என் புலன்மூடிப் புனையும் பொழுதொன்றிலும்
அது தன்வழியிடை
இறங்கிக் கொண்டேயிருக்கிறது.

ஓடை நனைக்கும் காற்று
என் புலன்குடித்து மயங்க
பதனமழிந்த என்பொறிகளைக் கக்கிய பாம்பு
ஓடை வழிதேடி ஊர்கிறது.


12102010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக