வெள்ளி, 8 அக்டோபர், 2010

உண்மை



-ந.மயூரரூபன்



காலம் உந்நிழல் மீது மிதித்தபோது
நீயெறிந்த அக்கல்
குளத்தில் வீழ்கிறது ஆழ.
வழுவழுப்பற்ற அந்தக்கல்
என் பொழுதைக்
காயப்படுத்திச் செல்கிறது.

கல்லால் முளைக்கும்
நீர்வளையங்கள்
கல்லைப்பற்ற நீளும்
என்கரங்களை ஒதுக்கித் தள்ளுகின்றன.

குளிரற்றும் கூரற்றும்
அசையும் வளையங்கள்
பொசுங்கிப் போகின்றன
என்னுணர்வுகளில்...
கல்லைப் பற்றித் தொடர்கிறேன்.

மெய்யுறைந்து பாரமேறிய கல்
கீழே வீழ்ந்துகொண்டேயிருக்கின்றது.

பற்றிய பின்னாய்
விளைந்துகொள்கிறது
கல்லின் பாரம் எனக்குள்ளும்.
மெய்யுடன் விழுந்துகொண்டேயிருக்கிறேன்
இருள் சறுக்கும் ஆழத்துள்.


08102010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக