புதன், 16 ஜூன், 2010

நரனெரி கங்கு


-ந.மயூரரூபன்


பேய்கள் தின்றெறிந்த
கொட்டைகள் முளைக்கும்
காலமொன்றின்
உருவிலா வனத்தீயினுள்
கூப்பிய கையுடைந்து
கெஞ்சிய வாய் கிழிந்தடங்கினர்.

உருவிலா வனம் மூட்டும்
நரனெரி கங்கின் புகை
வெளியிடை கசிந்து
மருளும் காற்றுடன் கலக்க
மலக்குழியில் மிதந்தனரென் சோதரர்
உயிர் தொலைத்த புள்ளிகள் கலைய.

நேற்றின் கூர் முனைகள்
காற்றைக் கீறிச்சிவந்தன.
ஒடிமுனை புதைந்த காற்று
அலறிச் சுழன்றோடுகிறது இன்றும்.
கிழிந்து சடசடக்கிறது எங்களின் காலம்.

நரனெரி கங்கின்
புகை சூழ்நிலத்துள்
அள்ளுண்டு போகிறது வாழ்க்கை.
உருவிழந்து தீய்கிறோம் நாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக