வியாழன், 10 ஜூன், 2010

உயிர் வளையம்

-ந.மயூரரூபன்


வார்த்தைகள் நெருங்கா
வளையத்துள் எங்கள் உயிர்
படுத்திருக்கிறது சோர்ந்து.
நீயெறியும் சொற்கள்
உணர்வுகளறுந்து அம்மணமாய்
திசைகளற்று ஓடியலைகிறது.

எங்களுக்கான சொற்களை
எண்ணியெண்ணி அடுக்குகிறேன்
உயிர் வளையத்துள்.
ஒலிதின்னும் பேய்ச்சுழலொன்று
புலன்மயக்கி ஓடித்திரிகிறது.

உனதுமெனதுமான சொற்கள்
உலர்ந்தபின் உடைந்துபோய்
சத்தமற்று எரிகின்றன.
ஒலியறுந்த நெருப்பினைப் பார்த்தபடியே
படுத்திருக்கிறது எங்களுயிர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக