வியாழன், 31 மார்ச், 2011

மூச்சுக்கயிறு


-ந.மயூரரூபன்

மூச்சை மூடிக்கட்டும் நொடிகளில்
நான் தொங்குகிறேன்...
இறுகும் கயிற்றிலிருந்து
என் வாசனையுடன் துடிக்கும் நொடிகளின்
ஏக்கம் சிந்துகிறது.
வலிநிறை தொட்டியாய்
என்னுடலின் தளம்பலில்
ஆயிரமாயிரம் கால்கள் முளைத்த பூச்சியாய் 
செத்துப்போகிறதென் சுரணை.


எல்லையொட்டிய இரவும் பகலும்
என் மூச்சுத் தங்கும் வெட்டையில்
துயிலத்தொடங்கிய பொழுதொன்றில்
உங்கள் நினைவுகளில் அழிந்துபோனது
என் வெட்டை.
என்னிலிருந்து ஒழுகும்
ஏக்க நொடிகளின் வாசனை
நீங்களொட்டிய எல்லைமுள்ளில்
தொங்கியாடுகிறது.

என்வெட்டையில் களவுபோன மூச்சுக்கள்
ஒட்டிப்புனைந்த இரவுகளில்
வளையக் கயிறுகளாய் தொங்குகின்றன.
சிந்திய நொடிகளில் மூழ்குமென்னை
வளைத்துக்கொள்கிறது மூச்சுக்கயிறு.

எல்லைப்புனைவற்ற வார்தைகள்
என்னுடலைக் காவிச் செல்கின்றன.

310320112250

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக