செவ்வாய், 15 மார்ச், 2011

நீளும் கனவுப்பாலை

-ந.மயூரரூபன்

வெறுங்காற்றுக்குள்
தீயடர்ந்திருப்பதாய்
என்குழந்தைகளுக்கு கனவுகள்
படர்ந்ததேயில்லை.
தீயவியும் நீருக்குள்
திரண்டிருக்கும் சுவாலைகளின்
பதுங்குகுழிகளும் இவர்களின்
பாதங்களுக்குள் கூர்முனை மறைத்தே
தூங்கிக் கொள்கின்றன.

வீட்டுள் குழந்தைகளின் கனவுகள்
நிறைந்துகொள்கின்றன.
ஆசையில் பொளியும் கனவுகள்
காற்றின் கட்குழிக்குள் உப்பிக்கொள்வதை
பார்க்க வேண்டுமெனும் அங்கலாய்ப்பே
அவர்களுள் ஈயாய் மொய்க்கிறது.

குழந்தைகளின் கனவுகளெரி வாசம்
உங்கள் கட்குழிக்குள்
ஒளிந்தே போகின்றன.
எரிக்கும் வெறுங்காற்று
குழந்தைகளின் தலைவருடும்
மெய்க்கணத்துள் ஏறிக்கொள்கிறது.

சுவாலைகள் தின்ற கண்ணீர்
கனவுகளற்ற குழந்தைகளின்
வெளிகளை கருமையாய் நிறைக்கிறது.

ஈய்க்கள் மொய்க்கும் கனவுப்பாலையில்
குழந்தைகள் தூங்குகின்றன. 


150320112140

2 கருத்துகள்: