திங்கள், 7 மார்ச், 2011

இருள் வாசனை நகரம்

-ந.மயூரரூபன் 

எனது நகரத்தின் தெருக்களில்
நான் நடக்கும் சுவடுகள்
வெந்துபோகின்றன.
எனது நிழல்கள் புகைந்து
தடமழித்துச் செல்லும்
வரைபடங்களையே கீறுகின்றன.

நரகத்தின் இருள்மூடி
ஒவ்வொரு யௌவனங்களிலும்
உடைக்கப்படுகின்றன.
நகரத்தைப்புணரும் பெருங்குறியொன்று
வண்ணங்களைத் தின்பதற்காய்
வாசனை சொட்டி
சாலை வெயலில் படுத்திருக்கிறது.

சுவடு மறந்துவரும் நீங்கள்
வாசனை கசியும் இருளில்
கரைந்து போகிறீர்கள்.
வரைபடத்துள் உருக்கொள்ளும் உங்களை
நகரம் விழுங்கிக் கொள்கிறது.

எனது சுவடுகள்
நகரத்து வரைபடத்துள்
ஒளிந்துகொண்டதாய்
என்னையும் அழைக்கிறீர்கள்.
புகையும் நிழல்களின் நிணவாசத்தில்
நகரத்தின் தெருக்களில்
உயிரற்று நானும் நடக்கிறேன்.

070320112225

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக