சனி, 2 ஏப்ரல், 2011

அம்மனை

-ந.மயூரரூபன்

நீரில் குளிக்கும் ஈரமாய்
எண்ணங்களை நனைக்கும் வார்த்தையை
அடிக்கடி அழைகிறேன்...
அம்மா!

காற்றில் நீயசைந்த கொடி
காய்தல் தொலைத்து
இன்னமும் என்னுரு வரைவதாய்
சடமொன்று கத்திப்போனது.

இன்னமும் தொற்றித்தொடரும்
உன்மடி புதையுமாசை
காற்றிலேறி திக்கற்றலைகிறது.

ஏழாய்ப்பிரித்த முட்டைப்பொரியலாய்
வார்த்தைகள் கூறுபட்டு
வரியடர்ந்த உன் முகத்தைச்சுற்றிச்
சுழன்றோடுகிறது மெய்ப்பொருள் தொலைத்து.
அம்மனை உன்பொருளே
நிறைகிறதெங்கும்.
பசியும் கவலையும்
என்னையணைக்க முடியாவெறுப்புடன்
உனக்குள் அடைந்துபோனது.
அவை உன்னுடல் தின்னுமிருளில்
தூங்கிப்போயின பொழுதுகளும்.

மெய்மையுடைபடும் கணங்கள் நிறைய நிறைய
என் வார்த்தைகள் தொலைந்துபோகின்றன.

020420111430

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக