செவ்வாய், 19 ஏப்ரல், 2011

சூரியசாட்சி


-ந.மயூரரூபன்


சூரியனின் கீழாக
எனது நிழற்கீறல்களை
உரித்துச்சுருட்டுகின்ற 
வியர்வைப் பொழுதுகளில்
என்னை விலக்கி நடந்தன
என் கால்கள்.


சலனம் வற்றிய
நிழற்சுருளுடன் தொற்றியிருக்கும்
வெறுங்கிடங்காய் என்னுடல்
ஒற்றைக் காகமொன்று
வெறித்திருக்கக் காய்ந்துபோகிறது.


உணர்வுகளிலூறிய கால்கள்
கருநாகம் கொத்திய 
இரவுகளிலேறிச் செல்கிறது.
நஞ்சடரும் இருள் மிதித்து
என்வீட்டு முனைகளில்
நோக்கற்று அமர்ந்தழுகிறது.


பறையொலி கொட்டுண்டோடும்
நிலத்துவழியில் போகுமென் கால்கள்
அதிருமோலங்களோடு அடைந்திருக்கிறது.
தலையறுந்த மரங்களைச் சுற்றி
எரிகனவுகளின் சாம்பல் படிந்துகொண்டேயிருக்கிறது.


மொட்டைமரத்தில்
என்கால்கள் தொங்கும் அலைபொழுதொன்றில்
சூரியனின்கீழ் முற்றுமுழுதாய்
நான் தொலைந்துபோனேன்.


190420112230


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக