-ந.மயூரரூபன்
ஓசைகள் விழிக்குமென
மனமெங்கும் துடிப்புக்கள் உலவும்.
ஓயாத நெஞ்சறையின் படபடப்பு மட்டும்
ஓய்ந்து போன உடலில்
உன்னிப்பாய்க் காதுமலர்த்தும்.
தொலைந்தது கொலுசா கொலுசின் ஒலியா?
புரியாத சூனியத்துள் பார்வை தொலைத்து
பரதேசியாய் அலைகிறது என்னுணர்வு.
முடிந்தவற்றின் வர்ணங்களின்னும் காயவில்லை
ஈரமின்னும் பிணைவறுக்காததாய்
குழைந்து என்னைப் பற்றுகிறது.
ஓர் வாசனை எங்கும் மிதக்கிறது.
ஓசைகளின் விழிப்பில் பதிந்து கிடக்கிறது
என் உயிரின் பார்வை.
வர்ணங்களின் குழையலை மனது நுகர்கிறது...
வாசனையின் ஈர்ப்பில்
வர்ணங்களில் விழுந்தன விழிகள்.
ஓசைகளின் சிலிர்ப்பில்
வர்ணங்களை வழித்தேன்...
உதிர்ந்தன வர்ணங்களெல்லாம்
கருமையாய் ஈரமற்று.
18112001
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக