சனி, 17 ஏப்ரல், 2010

தனிமை

-ந.மயூரரூபன்


முறைக்கிறதா என்னைப் பார்த்து
சிரிக்கிறதா என்னைப்பார்த்து
ஒன்றுமே புரியவில்லை
அதன் மாறுமுகத்தைத் துழாவிப் பார்த்தும்
பிடிபடவில்லை ஒன்றுமே.

நான் பார்க்கும் எல்லாமே
விரோதமாய்ப் பார்க்கின்றன
என்னை மட்டுமே.

என் கண்ணில் எப்போதும்
ஒட்டியிருப்பது பயந்தானோ?
பார்ப்பது எல்லாமே பயங்கரந்தானோ?
என்னுள் துடிப்பு ஏறிக்
குலைகிறது தாறுமாறாய்.

என்னுயிரைக் கொய்துவிடும்
கனவுகள் நெருக்குகின்றன.
கறுப்பாய்க் குந்தியருக்கும் அண்டங்காகமும்
அருட்டிப்பார்க்கிறது என்னை.
ஊசியாய்த் துளைக்கும் பார்வையும்
உடல் வறட்டக் கத்தும் சத்தமும்
மூச்சழிக்க வைக்கும் என்னை.
கொப்பில் குதிக்கும் தாட்டானும்
தேடித் திரிவது என்னைத்தான்.
ஊத்தை இளிப்புடன்
ஊடுருவிப் பார்க்குமது என்னை.

பார்வைகளிலெல்லாம்
உயிர் கொழுவித் தவிக்கும்.
நான் போகுமிடமெல்லாம்
நாயாய்த் தேடிப் பயந் தழைக்க வருமெல்லாம்.

என்னைவிட எல்லோரும் நண்பர்களே.
காகமும் தாட்டானும் கூடத்தான்.
அடிக்கடி செத்துப்போகும் உணர்வுகளுடன்
நான் மட்டும் தனியே.


08042001

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக