சனி, 17 ஏப்ரல், 2010

காலமும் நானும்

-ந.மயூரரூபன்

நான் பார்த்த மரங்களெல்லாம்
நன்றாய் வளர்ந்துவிட்டன.
இலைகள் மஞ்சளடித்து...
இறந்து... மீண்டும் மீண்டும்
பச்சைகளாய்த் துளிர்த்தும் விட்டன.
துளிர்க்கவும் தொடங்குகின்றன.
காலம் கடந்து செல்கிறது...
நான் மட்டும் அப்படியே னெ; நினைவுகளுடன்.

தூரத்தேகேட்டு
என்னைத் தேடிக் கசிந்துவரும்
சங்கொலியில் என் காலடிகள் மிதந்து
மண்ணொழுங்கையில் ஏறிச்செல்கின்றன.
முழுக்கைச் சட்டைகள் சினமூட்டும்
மார்கழிக் குளிரில் அதிகாலைக்கு முன்னே
விழித்துவிட்ட களிப்புடன்
எம் நடையோடசைந்து லாம்பும் எம்முன்னே
தொடர்ந்து வரும்.
வைரவர் கோயில் வாசலில்
திருப்பாவைப் பாட்டும்
ஒழுங்கை நாய்களின் குரைப்பும்
சங்குடன் ஓடிக்கலக்கும்.
காலைகள் இப்படிக் கலைய
அப்போதும் காலம் கடந்து சென்றது என்னுடன்.

மணலொழுங்கை கடந்து
மதகேறி மிதக்க வரும் எனது பள்ளியும்
குச்சொழுங்கை முழுதும் குவிந்து கிடக்கும்
எனது காலடிகளும்
மீண்டும் மீண்டும் கனவாய்ப் படிகின்றன.
நீண்ட பொழுதுகள் என் நடைபோல் கழிகின்றன.
முழுதாய் என்னைத் தன்னுள்ளே நிறைத்து
மூச்சுக்களால் நிறைந்து
மகிழ்வால் முட்டிய எங்கள் வீடு...
அப்போதும் காலம் கடந்து சென்றது என்னுடன்.

நம்பிக்கையூட்டும் பொழுதுகளைக் காவிக்
காலம் நடந்து செல்கிறது.
மரங்களின் பருவமாற்றம்
என்னிலும் படர்ந்து செல்கிறது.
மணலொழுங்கையின் தவிப்பு
தன்மூச்சினை என்மீது
எறிந்துகொண்டேயிருக்கிறது.
இப்போது காலம் கடந்து செல்கிறது...
என்னைத் தனியே விட்டு.


13012001

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக