-ந.மயூரரூபன்
வாழ்வின் ஆழத்தை வியக்கும் ரேகைத்தனமாய்
எம்முகவரிகள் வேர் நிறைத்தன.
வாழ்வின் பதிவுகளுடன்
எண்ண அடுக்குகளில் மாட்டிக்கொண்டு
உசாவும் உறவுக்கிளையாய்
சாவரை தழைக்கும் மண்ணின் நினைப்பு.
மண்ணின் நினைப்பு
சொந்தங்களைச் சுமந்ததால்
சுகித்திருந்தது பூரிப்பாய்.
முலையூறி விம்மும் தாய்மையாய்,
மூண்ட நினைவுகளுடன் முட்டிக்கொண்டு
பாசங்களைச் சுமக்கும்
பிஞ்சுகளாய் நாமன்று
தளர்நடையிட்ட தாய்மேனி.
தாய்மேனியின் உயிர்நாடி
ஓடுமுடல் எங்களது
புதையும் மணலில் பாவித்திரிந்த பாதங்களுடன்
கதைபேசிக் காத்திருந்த கரைவெளி
எல்லாம் எங்களது.
எங்களது சுரண்டப்படும் நினைவுகளால்
துன்பங்களாய்க் கரைந்தன பொழுதுகள்.
ஆசை பொதிந்த மண்ணுக்காய்,
உயிர்ப்பைப் பொழியும் வெளிக்காய்
ஆவிகலந்து உப்புக்காற்றுடன்
அசையும் எம்முயிர்க் கணுக்களின் கனவிது.
கனவி; வெளிகள் திரையின்றித் தூலமாய்...
விரியும் பொழுதுகள் நம்மண்ணிலும் படிந்தன.
முழங்கிய சங்கநாதத்தின் ஒலி
முடியாமல் அலையாய் நீண்டிங்கு
வெம்பித்தகித்த வெளியெங்கும்
உயிர்ப்பாய் ஒலித்தது.
மீண்டும்
புதையும் மணலில் பாவித்திரியும் பாதங்களுடன்
கதைபேசிக் களித்திருப்போம்.
நிலம் இதழ்-3 (2001)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக