-ந.மயூரரூபன்
ஒற்றைக் கிரீச்சிடலால்
காற்றின் மௌனத்துயில்
அதிர்ந்து கலைகிறது.
இராக்குருவியின் இந்த ஞாபகம்
அடிக்கடி நினைவுள் மீள்கிறது.
சுடராய் எரிந்தும்
சுடர்களாய்ப் பிணைந்தும்
சூரியனின் கிழக்கைத் தொடரப் பிறந்தவன்
பொந்தில் அடைந்து புகைந்தவியும்
அக்கினிக் குஞ்சாயானேன்.
தாலாட்டில் வளரும் துயிலாய்
தன் கனவைத் திரட்டி
எனக்காய் நினைந்து
உயிர்பொசியும் அம்மா…
அவள் நினைவு
காற்றில் படிந்திறங்கும்
விம்மலற்ற தாலாட்டாய்
என்றும் எனக்குள் இருக்கட்டும்.
அவளுள் என் நினைவு
விளக்குச் சுடரில் துடிக்கும்
நிழலாய் மட்டுமே இருக்கட்டும்.
ஒற்றைக் கிரீச்சிடல் நிற்காமல்
மீண்டும் நீழுகிறது அவலமாய்...
இன்றும் வருகிறது
இராக்குருவியின் அந்த ஞாபகம்.
இருள் சூழ்ந்த பொழுதுகள்
கரையும் நியதியற்று
நீழுகிறது முடிவற்றதாய்.
23042001
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக