செவ்வாய், 12 அக்டோபர், 2010

புலன்


-ந.மயூரரூபன்



வயிற்றால் ஊர மனமின்றி
நெகிழ்ந்து படுத்திருக்கிறது பாம்பு.
வீங்கிய வயிற்றுள்
செந்நீர் வற்றுமென் அங்கங்கழற்றிய
 பொறிகளைந்தும்
பதனமழியக் கிடக்கிறது.

தனிமை நெடுத்துப்
புலம்பியழும் புலன்களினோடை
மூச்சறியாக் காற்றுவெளியிடை இறங்குகிறது.
பறவைகளிறங்காப் புதர்கள்
என் புலன்மூடிப் புனையும் பொழுதொன்றிலும்
அது தன்வழியிடை
இறங்கிக் கொண்டேயிருக்கிறது.

ஓடை நனைக்கும் காற்று
என் புலன்குடித்து மயங்க
பதனமழிந்த என்பொறிகளைக் கக்கிய பாம்பு
ஓடை வழிதேடி ஊர்கிறது.


12102010

வெள்ளி, 8 அக்டோபர், 2010

இருள் மரம்


-ந.மயூரரூபன்



களைத்து விழுந்திருக்கும்
வெளிச்சத்தினலைவுகள்
கோழையாய்த் தீய்ந்து போகிறதிங்கு.

சித்திரங் கரிந்த நிலத்துள்
தீக்குணந் தின்னும்
கருங்காட்டு வெளியில்
சஞ்சலமறுந்துபோய்ப் படுத்திருக்கிறேன்.

என்னுடல் தின்னுங்குறி
கருங்காட்டு இருள் சப்புகிறது.
அது துப்பிய வெளியில்
அச்சம்பெருக்கும் இருள்மரம்
வளர்ந்தோங்குகிறது.

உயிருரிந்த பின்னும்
இச்சையுறிஞ்சும் உன்குறியால்
களைத்து விழுந்த
வெளிச்சத்தினுடல் புணரப் புணர
விழுந்து கொண்டேயிருக்கிறது இருள்.

08102010

உண்மை



-ந.மயூரரூபன்



காலம் உந்நிழல் மீது மிதித்தபோது
நீயெறிந்த அக்கல்
குளத்தில் வீழ்கிறது ஆழ.
வழுவழுப்பற்ற அந்தக்கல்
என் பொழுதைக்
காயப்படுத்திச் செல்கிறது.

கல்லால் முளைக்கும்
நீர்வளையங்கள்
கல்லைப்பற்ற நீளும்
என்கரங்களை ஒதுக்கித் தள்ளுகின்றன.

குளிரற்றும் கூரற்றும்
அசையும் வளையங்கள்
பொசுங்கிப் போகின்றன
என்னுணர்வுகளில்...
கல்லைப் பற்றித் தொடர்கிறேன்.

மெய்யுறைந்து பாரமேறிய கல்
கீழே வீழ்ந்துகொண்டேயிருக்கின்றது.

பற்றிய பின்னாய்
விளைந்துகொள்கிறது
கல்லின் பாரம் எனக்குள்ளும்.
மெய்யுடன் விழுந்துகொண்டேயிருக்கிறேன்
இருள் சறுக்கும் ஆழத்துள்.


08102010

புதன், 29 செப்டம்பர், 2010

எங்கள் வாழ்வு






-ந.மயூரரூபன்




மரணப் பொறிகள்
கடலோரம் படுத்திருக்க
சாவின் வாய்ப்புகள்
சற்றே விலகப்போன கணத்தில்
உயிர் சிந்தச் சிந்த
விழுந்து போனோம்.

உறவுகள் இறைந்துபோன
எம்நிலத்தில்
 நிலக்கண்ணிப் பொறிகளும்
ஊனுறுஞ்சும் கங்குல்களும்
தம் பொழுதுகளை
விழுத்தியிருக்க
மீண்டு்ம் எழுந்துகொள்கிறோம்...
வியக்காதிருங்கள் சோதரரே!




29092010

சனி, 11 செப்டம்பர், 2010

..................................


-ந.மயூரரூபன்



என்னை மூடிச்
சேர்ந்துபோன இலைகளெல்லாம்
உயிர் வரண்டுபோய்
என்மீது மோதுகின்றன.

உன்னினைவில் நனைந்து
வரளாதிருக்கும் என்னுயிர்
அந்தச் சருகுகளுடன்
இன்றும் உன்னைப்பற்றியே
பேசிக்கொண்டிருக்கிறேன்.

மகனே!
காயா நினைப்பெல்லாம்
உன்னால் அலைவுறும்
காற்றுக்குத் தெரியுமென
காத்திருக்கிறேன்.

மூவாறு மாதங்கள்
உன்மூச்சு உலவுமிடமறியாது
சித்தமழிந்து
கிழி சீலையானேன்.

என் கொள்ளிக்குடமுடைப்பான்
என்மகன்.
உயிர் வேகுந்தீ
மூண்டுவிட்டதடா.
நான் பேசிக்கொள்ளும்
சருகுகளெல்லாம்
சிந்தையுறைந்து
எரிகின்றன.

உயிர்மூட்டிய நெருப்பில்
உனக்காய்ச் சுருண்டிருக்கிறேன்
மகனே...


11092010

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

இக்குழந்தை


-ந.மயூரரூபன்



நிலத்தை மிதிக்கும் இருள்தான்
இவளது கூடாரத்தையும்
தன்னிடுப்பில் சொருகியிருக்கிறது.

ஒளித்துண்டுகளைப்
பொறுக்குகிறது இக்குழந்தை.
மின்மினிகளையும்
கைகளில் பொத்தி
தன்வீட்டுள் எறிகிறது.
ஒளித்துண்டுகளும் மின்மினிகளும்
ஈரங்குழைந்த
கூடார மண்ணுள் விழுகின்றன.

குழந்தையை விளையாடும்
பசியின் முளைகள்
மின்னுமவற்றைக் குத்துகின்றன.
குழந்தையின் கதகதப்பின்
எச்சம் மட்டுமே முளைகளில்
துடித்தபடியிருக்கிறது.

பயந்தோடுமந்த
ஒளிப்புள்ளிகளைப் பார்த்து
நாத்தொங்கிய நாய்
ஊளையிட்டுப் படுக்கிறது.

தானெறிந்த ஒளிக்குஞ்சுகளை
தன் கூடார வீட்டுள் காணாத
இக்குழந்தையின் சிறுபுன்னகையும்
பிய்ந்துபோகிறது.

தன்வீடு
கசிந்துவிடும் ஈரத்துடன்
நிலத்திலிருந்தழுகிறது குழந்தை...
நாய் தலையுயர்த்திப் பார்க்கிறது.


07092010

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

வலி

-ந.மயூரரூபன்


ஓடிக்கொண்டிருக்கும்
காற்றின் கருக்குகளில்
குந்தியிருக்கிறதுன் மனது.

 

குஞ்சுறை விழுத்திய

கிளைமையற்ற

முள்மறை முக்காடு
மூடித்தங்குகிறதுன்
சைனியத்துள்.

அறுந்துவிழுமொவ்வொரு
சினைகளிலுந் தொங்கி

அந்தரிக்கிறேன் நான்.



24052010