செவ்வாய், 7 செப்டம்பர், 2010

இக்குழந்தை


-ந.மயூரரூபன்



நிலத்தை மிதிக்கும் இருள்தான்
இவளது கூடாரத்தையும்
தன்னிடுப்பில் சொருகியிருக்கிறது.

ஒளித்துண்டுகளைப்
பொறுக்குகிறது இக்குழந்தை.
மின்மினிகளையும்
கைகளில் பொத்தி
தன்வீட்டுள் எறிகிறது.
ஒளித்துண்டுகளும் மின்மினிகளும்
ஈரங்குழைந்த
கூடார மண்ணுள் விழுகின்றன.

குழந்தையை விளையாடும்
பசியின் முளைகள்
மின்னுமவற்றைக் குத்துகின்றன.
குழந்தையின் கதகதப்பின்
எச்சம் மட்டுமே முளைகளில்
துடித்தபடியிருக்கிறது.

பயந்தோடுமந்த
ஒளிப்புள்ளிகளைப் பார்த்து
நாத்தொங்கிய நாய்
ஊளையிட்டுப் படுக்கிறது.

தானெறிந்த ஒளிக்குஞ்சுகளை
தன் கூடார வீட்டுள் காணாத
இக்குழந்தையின் சிறுபுன்னகையும்
பிய்ந்துபோகிறது.

தன்வீடு
கசிந்துவிடும் ஈரத்துடன்
நிலத்திலிருந்தழுகிறது குழந்தை...
நாய் தலையுயர்த்திப் பார்க்கிறது.


07092010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக