-ந.மயூரரூபன்
வண்ணமற்ற வண்ணத்துப்பூச்சிகள்
பறந்துவருகின்றன.
கொத்துக் கொத்தாய்
உயிர்கள் கரைந்துபோன
எங்கள் வெளியெங்கும் தங்கள்
வண்ணமற்ற வண்ணங்களைக் களைந்து
தூவிக் கண்ணீர் சொரிந்தன.
அவலப் பெருவெளியில் புதைந்து போனவர்களே!
சாம்பர் நிலம் இருண்டு போகிறது...
கறுப்பாயக் குவியும் பூச்சிகளால்.
அஞ்சலிக்கும் வண்ணமற்ற பூச்சிகளின்
நடுவிலொரு சுடர்
அலைவுறப் பார்த்திருக்கிறோம்.
ஒவ்வொரு பூச்சிகளும்
தங்களுக்கான வண்ணங்களைத் தேடுகின்றன.
இன்னமும் என்னுள் நிறைந்திருக்கும்
உங்கள் மூச்சுக்களின் கதகதப்பில்
எனது சிறகுகளை ஒட்டுகிறேன்...
என் வண்ணங்களைத் தேடிவர.
18052010
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக