புதன், 3 நவம்பர், 2010

பூராயம்


-ந.மயூரரூபன்



விழி விரிய விரியப் பார்க்க
இதென்ன விளங்காப் பூராயமோ
படையெடுக்கும் வாகனங்களில்
பரவசமாய் வீரங்கிளர
மூத்திரக் குடிலிருந்த ஒதுக்கையும்
புகுந்து முகர்ந்து பாக்குமிந்த
விலைபோன பூராயம்.

நிலம் வரண்டு
மனங்கிழிந்து
குடல்காயக் கிடக்கும்
மூச்சுக்களொன்றும்
உங்கள் பூராயவெளியி்ல்
மோதவில்லை.

மதர்த்த உங்களின் புதினங்களையே
வாகனங்களில் காவித் திரிகிறீர்கள்.

உலைந்த நிலத்திலும்
கிழிந்த கோவணத்திலும்
இந்தப் புதினங்களையே
விட்டுச் செல்கிறீர்கள்.

எங்கள் புதினங்கள்
புழுதி குளித்தபடி
எங்களுடனேயே கிடக்கிறது.


04112010.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக