ஞாயிறு, 11 மார்ச், 2012

ஒளியும் கண இரகசியங்கள்


-ந.மயூரரூபன்

ஆச்சரியங்கள் மிகச் சாதாரணமாய்
நடந்து போகின்றன.
மறைப்பதற்கு ஒன்றுமேயில்லை.
தடித்த இரவு கொட்டிய
மழையின் கத்திகள்
எனது தோலின் பின்னே
புதைந்து போகின்றன.

நினைவு மீள்வதற்காய்
வெளியழைத்த போதும்
இரவுகள் திறந்த 
பிசாசு முகத்தினழைவில்
என்னுயிரின் நிழல்
மறைந்து போனபின்னாய்
அசைவற்றிருக்கிறேன்.

பொழுதுகள் புணரும்
கண இரகசியத்தில்
உலர் செதிற்படையொன்று
உரித்துப் போனது எனது தோலை.
சில்லறைகளாய் உருண்டோடும்
உணர்வுகளில் எனது நிர்வாணத்தின் நாற்றம்
நிணங்களின் மீதலையும்
காற்றாய்ச் சுழன்றாடுகிறது.;

உன்னையும் என்னையும் போலவே
இது ஆச்சரியமற்றது.
புதிய தோலின் வாசனை
அவசரத்ததின் கொடுக்குகளை
செதில்களின் பின் மறைத்துப் படுத்திருக்கிறது.;

நண்பனே!
நீயும் என்னைப்போல
எங்களின் வெளியில் 
இதனை ஒளித்துப்போகிறாயா?

30102011