திங்கள், 27 ஜூன், 2011

கசங்கும் காலம்

-ந.மயூரரூபன்

எங்கள் நடைச் சேற்றில்
சாத்தான் விதைகளின் முளை.
உழக்கும் கால்களைத் தடவி அது
அங்கக் கொடியாய்ப் படரும்.
நிலத்தின் படுக்கைகள்
ஒவ்வொரு இராப்பொழுதிலும்
கசங்கிப் போகிறது.

அந்தரங்கத் துணையொன்று
இரகசியங்களில்
பறந்தோடும் மின்மினிகளைப்
பிடித்தொட்டுகிறது.
மெதுவாய்த் தின்னும் பூச்சிகளால்
கரைந்து போகிறதெல்லாம்.

சாத்தானின் பொழுதுகளில்
ஒளிப்பேதம் எங்கே?
ஆச்சரியங்கள் மயங்கிய
சாதாரண நாளொன்றில்
நிரந்தரமாயிற்று நிர்வாணம்.

நிலத்தைப் புணருமுடல்களின் கீழ்
கசங்கிப் போகிறது காலம்.

250620111550

வெள்ளி, 10 ஜூன், 2011

காளான் முளைத்த வெளி

-ந.மயூரரூபன்

என்னைத் தொலைத்துத் திரியும்
அந்தக் காற்று
வெளிச்சம்  பூசிய தன்பொழுதுகளை
மறந்தே போனது.

நான் கலைந்தபின்
தான் மிதக்கும் வெளிகளை
கீறிக் கீறி
இரவின் நார்களையுரித்து
ஒளிந்து கொள்வதற்கான
மாயையொன்றை வரைந்து கொள்கிறது.

நீலக் காளான்முளைத்த வெளிகளில்
எனது இலட்சம் புள்ளிகளும்
கோடிகளாயுடைந்து போயின.
காற்றிலொழுகிய
மூச்சில் அள்ளுண்டுபோகும் நான்
பலவாய்
மிகப்பலவாய்
அந்தக் காளான் வெளிகளில்
புதைந்து கொண்டிருக்கிறேன்.

100620112030