திங்கள், 28 பிப்ரவரி, 2011

அதே சாயல்

-ந.மயூரரூபன்

பரிதியில் ஊரும்
எனக்கான சாயல்களை
பாழடையும் மையங்களிலிருந்தே
நீ வரைகிறாய்.
உனது மையத்திலிருந்து நீளுமாரை
தேகங்களைத் தின்றும்
ஆன்மாக்களைப் புணர்ந்தும்
வட்டங்களை வரைகின்றன.
காலந்தோறும் பரப்புக்குறையா
வட்டங்கள் புனைய
உன்னாலேயே சாத்தியமாகிறது.
நீ நம்பும் தோற்றங்களெல்லாம்
பாழடைந்த மையத்தின்
பொய்மையுள் நனைந்தபடி
அந்த ஒற்றையாரையைப் பின்னுகின்றன.
மீண்டும் மீண்டும் என்னை எழுதவே
உன்னெண்ணப் பொட்டுக்கள் குவிகின்றன.
உனதாரை
இப்பொழுதும் அவர்களால்
யுகந்தோறும் மெய்ப்பிக்கமுயலும்
அதே சாயல்களையே வரையமுடிகிறது.

280220111550

புதன், 2 பிப்ரவரி, 2011

துயரிசையின் அவத்தை


-ந.மயூரரூபன்



நிலத்திலிருந்து உருண்டு திரளும்
வாசனையற்ற எங்கள் வாழ்க்கையின்
பழைய போர்வைகளை
உருவியெறியும் அழுக்குப்படிந்த கைகளில்
சாவீட்டு வாசனையின்
மிச்சங்களே ஒளிந்திருக்கிறது.

பளபளப்பற்று
பல மடிப்புக்களுடன்
எங்கள் காலத்தின் குளத்தில் தோய்ந்து
முதிர்வற்று நீளும் காலவுயிர்ச் சூட்டில்
உலருகிறது போர்வை.
காலம் நடந்ததும்
மிதித்ததுமான வாசனையையே
வாழ்க்கை அதன்மீது ஒட்டிச்செல்கிறது.

பறித்துச் செல்லும் போர்வையின்
சாயமாய்க் கூடித்திரியும்
வாழ்க்கையின் இரகசியம்
நிலத்தின் வெளியெங்கும்
தன் துயரநரம்பினை வைத்து
அதனோசை ஒளிய உறங்குகிறது.

மறைப்பற்ற துயர நரம்பினை
ஒவ்வொரு இராப்பொழுதும்
நினைவு தொலைத்து மீட்டுகிறேன்.
துயரிசையின் அவத்தை
பெருவெளியெங்கும் அவிழ்ந்தோடுகிறது.

020220111540