வெள்ளி, 31 டிசம்பர், 2010

நீயுருட்டும் சொற்கள்


-ந.மயூரரூபன்



பொறுக்கியெடுக்கும் சொற்களை
எங்கள் முட்படுக்கையெங்கும்
பரவவிடுகிறாய்.
பழைய வாசனைபடிந்த
தந்திரமற்ற உன் சொற்களில்
எங்களினுயிர்ச் சூடு
பட்டுக்கொண்டேயிருக்கிறது.

அன்பும் பாசமும்
இரைக்குடலில் ஓய்ந்து
ஒய்யென ஒளிகிறது.
முட்படுக்கை விரிப்பிலிருந்த
பசியின் வேட்கை
மறைப்பற்று வெற்றுவெளியெங்கும்
ஓடிக்கொண்டேயிருக்கிறது.

இரக்கமும் கருணையும்
பேய்ப்புனலில் குளித்த களைப்பில்
புலன் மயங்கித்திரிகிறது.
ஏந்த நீளும் கைகளொவ்வொன்றும்
வெற்றுச் சொற்களையே
அளைந்தள்ளுகிறது.

நீயுருட்டிய சொற்களின் பொதி
அவிழ்ந்துகொண்டேயிருக்கிறது.

ஈரமற்ற சொற்கள்
உன்மூச்சுடன்
புணர்ந்துகொண்டேயிருக்க
எங்களின் உடற்சூடு
அடங்கிக்கொண்டேயிருக்கிறது.


31122010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக