புதன், 19 மே, 2010

நினைவு


-ந.மயூரரூபன்


மெதுவாய் அசையும் நிலவு
ஈரமாய் மனதிலுறைந்து
நினைவுகளை உரசும் மெல்ல மெல்ல...

நதியோரம் உயிர்களறுந்து
சிதைந்தலறிக் கிடந்தபோதும்
நதியலையில் ஆடிச் சென்றாய் நீ.
பார்க்க யாருமின்றி மிதக்கும் வழியில்
எம்மோலத்தை விசிற மறந்து காவிச் சென்றாய்...

இன்றும் பாரமாய்... தளர்வாய்
மிதந்துவரும் உன்னிழல்
ஓலங்களை இறக்கிச் செல்கிறது
தன்னிச்சையாய் என்னுள்...

திங்கள், 17 மே, 2010

........ பூச்சிகள்



-ந.மயூரரூபன்

வண்ணமற்ற வண்ணத்துப்பூச்சிகள்
பறந்துவருகின்றன.
கொத்துக் கொத்தாய்
உயிர்கள் கரைந்துபோன
எங்கள் வெளியெங்கும் தங்கள்
வண்ணமற்ற வண்ணங்களைக் களைந்து
தூவிக் கண்ணீர் சொரிந்தன.

அவலப் பெருவெளியில் புதைந்து போனவர்களே!
சாம்பர் நிலம் இருண்டு போகிறது...
கறுப்பாயக் குவியும் பூச்சிகளால்.
அஞ்சலிக்கும் வண்ணமற்ற பூச்சிகளின்
நடுவிலொரு சுடர்
அலைவுறப் பார்த்திருக்கிறோம்.
ஒவ்வொரு பூச்சிகளும்
தங்களுக்கான வண்ணங்களைத் தேடுகின்றன.

இன்னமும் என்னுள் நிறைந்திருக்கும்
உங்கள் மூச்சுக்களின் கதகதப்பில்
எனது சிறகுகளை ஒட்டுகிறேன்...
என் வண்ணங்களைத் தேடிவர.


18052010

புதன், 5 மே, 2010

மனவெளி

-ந.மயூரரூபன்


எனக்குள் இறங்கும்
வர்ணங்களைக் காணவும்
அது தரும் யௌவனம் வீசும்வெளிகளில்
என்மூச்சின் கதகதப்பினையும்
காண்பதற்காய் தொடரும் நண்பர்களே!

மனதின் ஓரம் இழுப்புண்டு போகும்
சாத்தானின் உயிர்ப்பினையே
எனது உயிரின் முனைகள் கண்டுகொள்கின்றன.
இருளை விசிறிச் செல்லும் ஆண்டவனின் எதிரி
என் நிலமெங்கும்
எங்களின் ஓலத்தையும் விதைத்துச் செல்கிறான்.

சாத்தானின் இருளைத் தொடர்ந்து
கண்ணீரைச் சேர்க்கக்காத்திருக்கும் நண்பர்களே!
ஓல வெளிகளில் பிய்ந்துபோகும்
என் மனவெளிகளில்
ஆண்டவனின் உயிர்ப்பினைத் தேடுகிறேன்...
உங்கள் மனதிலிருந்து
சிறிது சிறிதாய் அதற்கானஒளியைத் தாருங்கள்.





05052010