-ந.மயூரரூபன்
தானாய் அவிழும் முடிச்சுகளில்
முட்டித் துடித்துவரும் ஓலங்கள்
என்காலடிகளைத் தேடி
ஓடிவருகின்றன.
அடக்கம் செய்யப்படாததாய்
சாவறிவித்தல் கொடுக்கப்பட்ட ஓலங்களில்
மரணத்தின் உறவினைக் காணமுடியவில்லை.
எனது முடிச்சு அவிழும் பொழுதுகளில்
அதன் உயிர்ப்பின் கூர்மையை அனுபவிக்கிறேன்
ஓரங்கள் சீவப்பட்ட எனது காலடிகள்
இரத்தத்திலே தோய்ந்திருப்பதாக
அம்மா அழுகின்றாள்.
நான் எனது மண்ணில் நடக்கிறேன்...
வெளியெங்கும் சிவப்பாகும் காலத்தை
நான் என சந்ததிக்காய் வரைந்து கொள்வதாக
நீ சொல்வது எங்கும் கேட்கிறது.
மண்ணின் முடிச்சுகள்
உனக்குள்ளும் அவிழ்ந்து கொள்ளும்.
விட்டு விடுதலையாகும்
ஓலங்களின் தரிசனத்தினை
அப்போது நீயும் வரைவாய்.
17042010